திங்கள், 21 டிசம்பர், 2009

அம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்....!

அது 1920 களின் மத்தி.....அம்பாசமுத்திரம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பின் திருவனந்தபுறம் சமஸ்தானத்திற்குட்பட்டு இருந்த காலம்...ஆக்ராகரங்களும், நிறைய விளைநிலங்களும்.......அதையொட்டிய சேரி பகுதிகளும் ........என்று ஒரு கட்டமைப்பை கொண்டிருந்தது அப்போதைய அம்பாசமுத்திரம். ஐயங்கார், பிள்ளைமார், தேவர், மற்றும் தலித் மக்கள் பரவியிருந்தனர் அம்பையின் சுற்றுவட்டத்தில்....அங்கிருந்த பெரும்பாலான விளை நிலங்கள் ஐயன்கார்களிடமும் பிள்ளை சமூகத்திடமும் மீதி உள்ள நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் சொந்தமாக இருந்தது...

தேவரினத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலங்களை நிர்வகிப்பவர்களாக இருந்தார்கள்....அங்குள்ள தலித் மக்கள் அனைவரும் விவசாய கூலிகளாக இருந்தார்கள்....மேலோட்டமாக பார்க்கும் போது அடக்கு முறை அதிகமாக தென்படுவதை போல் ஒரு பிம்பம் இருந்தாலும்..நெல்லை சீமையை பொறுத்த வரை தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் இணைந்து இருக்க வேண்டிய சூழ்நிலை.......குறிப்பாக தலித் விவசாய கூலிகள்..அவர்களை நிர்வகிப்பவர்களாக தேவரினத்தை சேர்ந்தவர்கள்.....

அம்பாசமுத்திரத்தை பொறுத்த வரை தலித் கூலிகள் அனைவரும் அங்குள்ள விளை நிலங்களை சுற்றியே குடியேறியிருந்தனர்...அவர்கள் மாற்றுடை இல்லாவிடிலும் நிதமும் இரு வேளை குளிக்க பழகியிருந்தனர்....தேகத்திலும் தலை மயிரிலும் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொண்டனர்....வேப்பங்குச்சியில் பல் துலக்கவும் கற்றிருந்தனர்..! மேற்சொன்ன விடயங்களெல்லாம் ஒரு சராசரி தலித் செய்ய மாட்டான் என்பதே பொதுவாக ஆதிக்க வர்க்கத்தின் பார்வையாக இருந்தது......விளை நிலங்களை ஒட்டியே கிளை ஆறுகள் பாசனத்திற்காக ஓடும்....ஆக அங்குள்ள தலித்களுக்கு பொது தண்ணீர் என்ற பிரச்சனை எழவில்லை...

அம்பாசமுத்திரத்தின் ஒரு ஓரம் உள்ள பகுதிதான் தலித் மக்கள் வாழும் முடப்பாலம்....அங்கே உள்ள விவசாய கூலிகளில் ஒருவன்தான் செல்லையா...பொதுவாக அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களெல்லாம் கடும் உழைப்பும் அதற்கேற்ற வாறு உணவு உட்கொள்ளும் பழக்கம் கொண்டதால் கட்டுடல்களையும் வலுவான கைகளும் கொண்டிருந்தனர்....இளவட்டக் கல் இன்றும் முடப்பாலத்தில் இருக்கிறது......



செல்லையாவும் அதில் விலக்கல்ல....களையான முகவெட்டும் பணிவான பேசும் குணமும்....மாநிறம் உடையவன் தான் செல்லையா.....அதிக அளவில் விளைநிலங்களை உடைய ஐயங்கார் மட்டுமே நில நிர்வகிர்ப்பிர்க்கு தேவர்களை நியமித்தனர்..ஓரளவு நிலம் உடைய ஐயங்கார் நிலசுவான்கலேல்லாம் நேரிடையாக முடப்பால இளைஞர்களிடமே தங்கள் நிலத்தை ஒப்படைத்து பண்ணையம் செய்து வந்தனர்....அந்த தலித் இளைஞர்களும் மிகுந்த பயபக்தியுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொண்டனர் தங்கள் எஜமானர்களுக்கு.......... இப்படி நேரிடையாக விவசாயம் செய்து வந்த தலித் இளைஞர்கள் ஆக்ராகாரத்தினுள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர்...சில கட்டுப்பாடுகளோடு.......கால்களில் செருப்பு அணிய கூடாது......மற்றும் மேலாடை அல்லது தோள்களில் துண்டு அணியக் கூடாது....இடுப்பில் இருந்து முட்டு வரை இறுக்கிக் கட்டிய வேட்டியுடன் அகன்ற மார்புகளுடனும் இந்த தலித் இளைஞர்கள் அக்ராகரத்தினுள் செல்லும்போது அங்கு பெண்கள் பெரும்பாலும் வெளியில் நிற்ப்பதில்லை.....ஆனால் மாடியில்ருந்து நிறைய மான்விழிகள் ரசித்தவண்ணம் இருந்தன........இந்த இளைஞர்கள் ஐயங்கார் ஆண்களை சாமி என்றும்....அந்த வீட்டு பெண்களை தாயி என்றும் அழைத்தனர்....



சிறப்பு அனுமதி பெற்ற முடப்பாலத்து இளைஞர் பட்டாளத்தில் செல்லையாவும் ஒருவன்...செல்லையா நன்றாக பாட்டு பாடும் திறனும் பெற்றிருந்தான்....வயல் வேலை முடிந்ததும் குளித்து விட்டு, இறக்கிய கள்ளை குடித்து பாட்டு பாடி மகிழ்வது அங்குள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு...


செல்லையாவின் எஜமானருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே........தெய்வானை என்ற பெயர்.....தேவதை போலிருப்பவள் அவள்......நாட்டியமும் வாய்ப்பாட்டும் தேர்ச்சி பெற்றிருந்தாள்....செல்லையாவை விட ஐந்து வயது சிறியவள் அவள்.......செல்லையாவின் விசுவாசம் ரொம்பவே அந்த எஜமானரை கவர தொடர்ந்து அவனே அவர் வயல்களை பார்த்துக் கொண்டான்.....எஜமானரின் வீட்டின் பின்புறம் ஒரு அறையில் ஐயங்கார் வீட்டு சாதமும் பரிமாறப்பட்டது அவனுக்கு.....அந்த வீட்டு பெண்களை முகம் பார்த்து பேசும் அளவிற்கு உரிமை பெற்றிருந்தான் செல்லையா......வகைதொகை இல்லாமல் ஊளைச்சதயுடன் அமைப்பற்ற தேகம்கொண்டும்...கல்வி கற்ற செருக்கில் சம்ப்ரதாய முறைப்படி நடந்து கொண்ட ஐயங்கார் வீட்டு இளைஞர்கள் மத்தியில் கட்டுடலுடன் மாநிறமான ஒருவன் எண்ணெய் வழியும் முகத்துடன் நாட்டுபுற பாட்டு பாடி காண்பிப்பதை தெய்வானை மிகவும் ரசித்தாள்.......அவளையுமறியாமல் செல்லையாவின் மேல் ஒரு ஈடுபாடு வந்திருந்தது....

அதன்பிறகான நாட்களில் செல்லையா அக்ராகரத்தில் நுழையும்போதே தண்ணீர் செம்புடன் காத்திருப்பாள் தெய்வானை.....வீட்டின் பின்புறம் அவன் வந்ததும் அவள் தண்ணீர் ஊற்ற தன் கைகளை குழிவு செய்து அதில் தண்ணீர் நிரம்ப பருகினான் செல்லையா.....நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதிலிருந்து அவர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து பின்பு தொழுவத்தில் கட்டுவது என பெரும்பாலும் செல்லையாவின் நேரம் தெய்வானை வீட்டிலேயே கழிந்தது.....இப்டியான காலத்தில்தான் தெய்வானைக்கு விவாகம் நடத்த பேச்சு நடக்க ஆரம்பித்தது அவர்கள் வீட்டில்...ஆழ்வார் திருநகரியில் உள்ள அவர்கள் சொந்த கார மாப்பிளை பேசி முடித்திருந்தனர்...
அடுத்தடுத்த நாட்களில் தெய்வானை முகம் கருப்பதை கண்ட செல்லையா ஒரு மாலை பொழுதில் காரணம் கேட்க......கதறி அழுத தெய்வானை செல்லையாவை நேசிப்பதை சொன்ன உடன்.....நொறுங்கிப் போனான் செல்லையா.....பதிலற்று போன செல்லையா பின்பு நிதானமாக தெயவானயிடம் இப்படி சொன்னான்.....நீங்கல்லாம் நாங்க கும்புட்ற சாமிக்கு சமம்.....சாமிய எப்டி ஒரு மனுஷன் கல்யாணம் பண்ண முடியும்?? அப்டி ஒரு எண்ணமே எவ்வளவு பெரிய பாவம். என்று சொன்ன செல்லையா உடனே வீடு திரும்பி படுத்துக் கிடந்தான்.....அடுத்த நாள் அங்கு செல்வதை பற்றி மிகுந்த யோசனை கொண்ட செல்லையா இறுதியாக போக முடிவெடுத்தான்...

அங்கு சென்ற பொழுது எஜமானரும் அவரின் துணைவியாரும் திருமணம் சம்மந்தமாக வேலைகளுக்கு வெளியில் சென்றிருந்தனர்....தெய்வானைக்கு துணையாக ஒரு வயதான பாட்டி மட்டும்...செல்லையாவை கண்ட தெய்வானை ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது துணிமணிகளை ஒரு சேலையில் கட்டி கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்.........என்னை மனம் செய்துகொள் என்று செல்லையாவிடம் தெய்வானை கேட்ட பொழுது, அவளின் கால்களில் விழுந்து விட்டான் செல்லையா.... ..
விஷயத்தை செல்லையா தன் தகப்பன் கசமாடனிடம் சொல்ல கலவரமான கசமாடன்....மூட்டை முடிச்சிகளுடன் செல்லையாவை பாபநாச மலை வழியே கேரளம் செல்லும் வழியின் ஊடாக கேரளம் அனுப்பி வைத்தான்....,,,கசமாடனே அதற்குபிறகு தேவானையின் வீட்டு வயல்களை பார்த்து கொண்டார்...தெய்வானைக்கு நிச்சயித்த மாப்பிள்லையுடனே விவாகம் நடந்தேறியது.........நான்கு வருடம் கழித்து கேரளத்தில் இருந்து வந்த செல்லயாவிர்க்கு 25 வயதில் தன்னுடைய தாய்மாமன் பெண்ணையே மனம் முடித்து கொண்டான்..

(2006 இல் ஜூலை மாதத்தில் தன்னுடைய 96 வயதில் இறந்துபோனார் என்னுடைய பாட்டன் செல்லையா, அந்த ஆரிய பெண்ணின் காதலுக்கு விடை சொல்லாமலே....)

14 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

அலெக்ஸ் ஹேலி எனும் கருப்பர் எழுதிய ஏழுதலைமுறைகள் படித்தேன் அது ஒரு அடிமைச்சரித்திரம். பதினெட்டாம் நூற்றாண்டுவாக்கில் தொடங்கும். அதிலிருந்து அழுகையும் அவமானமும் கற்பழிப்புமாக வழிநெடுக ரத்தவாடை. ஆறுதலைமுறை தாண்டிவந்து ஏழாவது தலைமுறையில் கதை முடியும். முடிக்கிற அலெக்ஸ் ஹேலி தான் ஏழாவது தலைமுறை கறுப்பர். அது போன்ற அமைப்புக்கொண்டது இந்த பதிவு. நல்ல எழுத்து என் அன்புத்தம்பி. ஆபரணச் சொற்களற்ற தன் வரலாறுகள் தான் கறுப்பிலக்கியத்தின் சாறு. அதைவிட்டால் வேறு என்ன இருக்கிறது அடித்தட்டு களைப்பற்றி மக்களைப்பற்றிச் சொல்ல ?.

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

எழுத்து நடை சிறப்பு
கருத்து பகிர்விற்கு நன்றி

லெமூரியன்... சொன்னது…

வாங்க காமராஜ் அண்ணா.....!
சிறிய இடைவெளிக்கப்பரம் உங்கள் பதிவுகள் மற்றும் மறுமொழி........
மிக்க சந்தோசம்.......!

பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு விடுமுறை நாளில் தாத்தாவை சந்தித்த பொழுதில் இருவரும் மது அருந்தி விட்டு பின்னிரவு வரை வாய்க்கால் ஓரம் உள்ள ஆலமரத்தடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது திடிரென எனக்கு அவருடைய பால்ய வயது பற்றி கேட்க தோன்றியது................கேட்டே விட்டேன்............
சத்தியமாக இப்படி ஒரு புரட்சிகரமான காதல் கதை அவருக்கு பின் இருக்கும் என்பதையறியாமல்........
மனதில் தோன்றிய பல வியப்பான கேள்விகளுக்கு இன்னும் எனக்கு பதில் கிடைக்கவில்லை....அன்றிரவு வெகு இயல்பாக இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு தூங்கி போனார் செல்லையா தாத்தா.........ஆனால் நான் உறக்கமற்று போனேன்.........
1920 களில் உள்ள கலாசாரத்தில் ஒரு அக்ரகாரத்து பெண் ஒரு தாழ்த்த பட்டவன் மீது காதல் கொண்டதும் அவனையே மணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறக் கூடிய தைரியத்தை எது தந்தது என்பதை நினைத்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது......

லெமூரியன்... சொன்னது…

வாங்க நிகே.....!

வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

எழுத்துநடை எதார்த்தம் அருமை.. லெமூரியன்

லெமூரியன்... சொன்னது…

வாங்க மலிக்கா.......!
உண்மைச் சம்பவம் ஆயிற்றே...அதனால்தான் யதார்த்தமாக வந்திரிக்கிறதோ என்னவோ :-)
வருகைக்கும் மறு மொழி இட்டமைக்கும் மிக்க நன்றி மலிக்கா...!

Chitra சொன்னது…

(2006 இல் ஜூலை மாதத்தில் தன்னுடைய 96 வயதில் இறந்துபோனார் என்னுடைய பாட்டன் செல்லையா, அந்த ஆரிய பெண்ணின் காதலுக்கு விடை சொல்லாமலே....) .........அருமையா எதார்த்தமா கதையை சொல்லி இருக்கீங்க. முடிவு, நெகிழ வைத்து விட்டது.

லெமூரியன்... சொன்னது…

வாங்க சித்ரா...!
அப்போதிருந்த அடக்கு முறையும் ஜாதிய துவேஷமும் கொண்ட ஒரு காலத்துல இப்படி ஒரு காதல் தோன்றியிருக்றதே எனக்கு யதார்த்தத்தை மீறிய ஒரு செயலா தெரியுது சித்ரா........

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சித்ரா...!

angel சொன்னது…

nala alagaga eluthi ulirgal valthukal

லெமூரியன்... சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி angelin பின்தொடர்ந்தால்
இன்னும் மகிழ்வுருவேன்..!

ஹேமா சொன்னது…

அன்றும் இன்றும் நிலைமை ஒன்றேதான்போல இருக்கு.
போனவாரம் நீயா நானா நிகழ்வும் இதேதான்.அப்போ என்னதான் விஞ்ஞானத்தால் உலகை மாற்றிக்கொண்டிருந்தாலும் மனிதனின் மனங்கள் மாறவில்லை அல்லது மாற்றவும் முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

லெமூரியன்... சொன்னது…

கண்டிப்பா.....மனித மனங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை...
ஒரு வேளை தமிழனின் தனித் தன்மைன்னு இத எடுத்துக்கனுமோ??? :-(

தென்னாப்பிரிகா மற்றும் இலங்கையிலும்
இதே நிலைமை தானாமே????

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா..!

ஜோதிஜி சொன்னது…

உங்களுடைய ஒவ்வொரு விமர்சனத்தையும் பார்க்கும் போது உங்கள் ஆதிக்கம் என்னை பயமுறுத்தும். இந்த இரண்டு பாரா படிக்கும் போதே எதை நோக்கி நகர்கிறது என்று புரிந்த போதிலும் மொத்தமாக முடித்த போது அதிர்ந்து விட்டேன்.

சலசலவென்ற நீரோடை போல உங்கள் நடை. மிகப் பெருமையாக இருக்கிறது உங்களை நண்பர்களாக பெற்றதற்கு.

லெமூரியன்... சொன்னது…

நன்றி நண்பா....! உங்கள் வார்த்தைகளைன்த்தும் மிகவும் தெம்புஊட்டுகிறது எனது எழுத்துக்களுக்கு.!