செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் பாரம்பரிய உடை கலாச்சாரமும்...சக தமிழனும்.!

நெடு நாளாக மனதை உறுத்திய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்...டால்மியா புறத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வீர சாகசம் புரிந்த தலைகளெல்லாம் ஆட்சி கட்டில் ஏறிய பிறகு அடங்கிப் போனது தமிழுணர்வு....

அதன் பிறகான நாட்க்களில் தமிழுணர்வு போலவே தமிழ் கலாச்சாரமும் சுருங்கத் தொடங்கி விட்டது.... தமிழன் மெல்ல மெல்ல தன் சுயத்தை இழக்கத் தொடங்கியபோது பாரம்பரிய உடைக் கலாச்சாரமும் மறைய ஆரம்பித்திருக்கிறது....குறிப்பாக தமிழின ஆண்களின் அதிலும் படித்த மத்திய தர வர்க்கத்தினரும் மேல் வர்க்கமும் தமிழருடை என்ற ஒன்றே மறந்து போனவர்களானார்கள்...ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி வடிவ சட்டை, மற்றும் பலவித நவின ரகங்களில் உடைகள் உலாவுகின்றன தமிழ் ஆண்கள் மத்தியில்.. இப்போது வேஷ்டி சட்டை அணிவதென்பது இரு சாரர் மட்டுமே...

அரசியல் கட்சிகாரர்கள் மற்றும் கிராமத்து தமிழர்கள்....(குறிப்பாக தென்னகத்து தமிழ் கிராமங்கள்) இதை விடக் கொடுமை தமிழ் இலக்கியவாதியும் எழுத்தாளரும் ஆனா ஒரு பிரபலம் புத்தகம் வாங்க தமிழுடையில் சென்றபோது புத்தக அன்காடியினுள் அனுமதிக்க மறுக்கப் பட்டிருக்கிறார்...வேறெங்கும் அல்ல...சென்னை மாநகரத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியிருக்கிறது...தமிழ் நாட்டில் தமிழுடை அணிந்தால் தவறா? உற்று நோக்கும் போது ஒரு விடயம் புலனாகின்றது..அது வேறொன்றும் அல்ல தன்னை தானே தாழ்த்திக் கொள்வதில் பேரானந்தம் அடையும் தமிழன் தன் உடையை மட்டும் விரும்புவானா என்ன? இதில் முதற் பங்கு தமிழ் சினிமாவிருக்கு உண்டு...தமிழ் திரையில் தோன்றும் கதைநாயகன் கதைநாயகியின் மேற்க்கத்திய உடையை கேலி பேசி தமிழ் பண்பாட்டுடன் கூடிய உடையை உடுத்த சொல்வான்...அவளும் மனம் மாறி தமிழுடைக்கு (தாவணி மற்றும் சேலை...) மாறி விடுவாள்...உடனே நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பிறந்து விடும்...பின்பு கதை நாயகியின் குண்டிகளில் இடித்து பாட்டு பாடுவான் காதல் செய்வான்...இவ்வளவையும் செய்யும் அந்தக் காவாலிப் பயலின்( கதையின் நாயகன் தான் ) உடை என்னவோ மேற்க்கத்திய பாணியில் தான் இருக்கும்....ஏன் இவன் வேஷ்டி சட்டை அணிந்து அதை சொல்ல வேண்டியதுதானே... சமீபத்தில் நண்பனின் திருமண விழாவில் கலந்து கொள்ள வேஷ்டி சட்டையில் சென்றிருந்தேன்..மண்டபத்தின் வாயிலில் நின்ற பெண் சந்தனத்தை நீட்டவும்..நெற்றியில் சிறிது இட்டுக் கொண்டு உள் சென்றேன்...என்னை வரவேற்ற நண்பனின் சகோதரி (இப்பொழுதான் முதன் அறிமுகம்)
கேட்டாள்.. நீங்க மலையாளியா?? தூக்கி வாரிப் போட்டது அவளின் கேள்வி...அவளிடமே காரணம் கேட்டேன்...அவளின் பதில் இப்படி- மலையாளிங்கதான் விழாக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் தங்கள் பாரம்பரிய உடை அணிவார்கள் அதான் கேட்டேன் என்றாள்...யோசித்து பார்க்கையில் உண்மை என்றே தோன்றுகிறது....யோசித்து சொல்லுங்கள் நீங்கள் எத்தனை பேர் சமீபத்தில் வேஷ்டி அணிந்தீர்கள்..அல்லது வாங்கினீர்கள்???? கணுக்கால் வரையிலும் மறைக்கும் மிக நாகரிகமான மற்றும் வசீகரமான இவ்வுடையை வெறுக்க காரணம் என்ன? இவ்விஷயத்தில் தமிழ் பெண்கள் போற்றும் ரகத்திலேயே இருக்கிறார்கள்...அவர்கள் முழுதாக மேற்க்கத்திய உடைக் கலாச்சாரத்திற்கு ஆட்படவில்லை..(ஆணாதிக்கம் காரணமாக கூட இருக்கலாம்).....இன்றும் அதிநவீன கைகடிகாரம் உந்துருளி ( BIKE ) அல்லது மகிள்வூர்த்தி (car ) வைத்து கொண்டு வேஷ்டி சட்டையில் கல்லூரி போகும் மலையாளிகளை சர்வசாதாரணமாய் கேரளாவில் காணலாம்...ஆனால் தமிழகக் கல்லூரிகளில் வேஷ்டியில் செல்வது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கல்லூரிகள் மட்டுமே! ...உலகில் தோன்றிய அனைத்து இனங்களும் தங்களுடைய அடையாளங்களை போற்றி பாது காக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழினம் மட்டும் தன் அடையாளங்களை பாரம்பரியத்தை மறுப்பதும் மறைப்பதும் ஏனோ ?? !!

6 கருத்துகள்:

இளந்தமிழன் சொன்னது…

இந்த தீபாவளிக்கு நான் வேட்டிதான் அணிந்தேன். கிராமங்கள் இருக்கும் வரை வேட்டியும் இருக்கும்.
இனி உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.

லெமூரியன்... சொன்னது…

மிக்க நன்றி இளந்தமிழா...அதுவும் முதற் கருத்துரை உங்களிடன் இருந்து....வாருங்கள் இனி சேர்ந்து பதிவுலகை கலக்குவோம்(கலக்க முயற்சி செய்வோம்..) :-)

காமராஜ் சொன்னது…

வாருங்கள் லெமூரியன் எங்கோ கேள்விப்பட்ட பெயர்போலத்தெரிகிறது.
உங்களோடு சேர்த்து இந்த பதிவுலகில் அடர்த்தியான கருத்துக்கள் பதிவிட
மிகச்சிலரே இருப்பதுபோல உணர்கிறேன். வலையின் சகல திசையிலும் பயணிக்கலாம்,
இந்த உலகத்தை கணினித்திரை வழித்தேடலாம். அதையும் தாண்டிய
மக்கட்பகுதி வெளியிலும் கிடக்கிறது.வாருங்கள் சேர்ந்து தேடுவோம்.

காமராஜ் சொன்னது…

வேஷ்டி அணிவது, கால்சராய் அணிவது எல்லமே அவரவர் விருப்பம்
தமிழனுக்கென அலதிக் கலாச்சாரம் இருக்கக்கூடதென நினைப்பது மட்டும்
கவனிக்கப்படவேண்டிய பொருள். இந்தக்கதாநாயகர்கள் செய்த கொடுமை கொஞ்சமா ?
அவர்கள் அள்ளிப்போட்ட குப்பைகளை ஒதுக்க எத்தனை தலைமுறை ஆகுமோ.?
உங்கள் கேள்வி நியாயமா என்னன்னு தெரியவில்லை.
ஆனால் பண்டிகைக்கு வேஷ்டியணிவது கொஞ்சம் கூடுதல்
விழாத்தண்மையைக் கொண்டுவருகிறது. மீண்டும் ஆரம்பிக்கலாம்.
நல்ல பதிவு.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் தோழர்...பதிவுலகைப் பொருத்த வரை நான் ரொம்பப் புதியவன்...மேலும் பதிவுலகில் உள்ள பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் பார்த்து சற்று மிரண்டுதான் போனேன்.....ஆனால் உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் தெம்பூட்டுவனவாக உள்ளது.....வருகிறேன் தோழர்...நீங்களும் உடன்வருவதால் சற்றே மிகுந்த தைரியத்தோடு..

லெமூரியன்... சொன்னது…

வருகை தந்து கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றிகள் தோழர் காமராஜ் ...!